இந்தியா vs இலங்கை:இன்று நடைபெறவிருந்த ஆட்டம் ஒத்திவைப்பு – இந்திய வீரருக்கு கொரோனா உறுதி..!

இன்று நடைபெறவிருந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது டி-20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து,நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதனால்,இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கொரோனா உறுதி:

இந்நிலையில்,இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டி-20 போட்டி இன்று நடைபெற இருந்த நிலையில்,கிருனல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,மற்றவர்களுக்கும் கொரோனா இருப்பதை அறிய முழு குழுவும் இன்று ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு:

இதனால்,இரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற இருந்த இரண்டாவது டி-20 போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்திய மற்றும் இலங்கை அணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக,கிருனல் பாண்ட்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வீரர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக,பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் இலங்கை அணியின் வீடியோ ஆய்வாளர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து,ஒருநாள் தொடரின் தொடக்கமும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.