சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடர், அடுத்தமாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.

2021-ஆம் ஆண்டிற்கான 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானத்தில் தலா 10 போட்டிகளையும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், தங்களின் அணியுடன் இணைந்த வீரர்கள், பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்கள். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, சென்னைக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தல தோனி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.