#Breaking:அதிர்ச்சி…ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சை:ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனையடுத்து,கேரளாவில்  காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சூழலில்,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில்,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் நேற்று இரவு ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து,கால்நடை கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் 3 மாணவர்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.எனினும்,ஷவர்மா சாப்பிடுவதால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நிகழ்வது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனிடையே,புதுக்கோட்டை அறந்தாங்கியில் உள்ள A1 உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.