வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது – அன்புமணி ராமதாஸ்

பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

தர்மபுரி மாவட்டம் மொராப்பூரில் இஸ்லாமியக் கைதிகள் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பேச்சாளரான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் சிலர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து, தமிழக முதல்வரையும், திமுகவினரையும் மோசமாகப் பேசியதால், நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்ட மேடையில் ஏறிய திமுகவினர், பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது, வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தவறானது. கருத்துக்கு, கருத்தை தான் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வன்முறை கூடாது எனவும் கூறினார்.தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்