ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

ஸ்டெர்லைட்டை திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன.

மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

கொரோனா நோயாளிகளின் உயிர்களைக் காக்க அவர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசிப்பது அபத்தமானது, அவமானகரமானது.

பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக்காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா? என்றும் ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் என்றும் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்