மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை – ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங்(வாள் சண்டை) போட்டியில் தோல்வியுற்றதால் மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை  பவானி தேவிக்கு,காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்று காலை முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் சுற்று – வெற்றி:

அதன்படி,இன்று நடைபெற்ற ஃபென்சிங் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து பவானி தேவி ஆதிக்கம் செலுத்தி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து,பவானி தேவி தனது எதிர்ப்பாளரான அஸிஜியை 2 சுற்றுகளுக்கு மேல்,அவரை மேற்கொண்டு புள்ளிகள் பெற விடாமல்,துல்லியமாக தாக்கியது மட்டுமல்லாமல்,சில ஸ்மார்ட் தொடுதல்களினால் தனது புள்ளிகளையும் சேகரித்தார்.

இறுதியில்,பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.

இரண்டாவது சுற்று -தோல்வி:

முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி,இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டை எதிர்கொண்டார்.மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 ஃபென்சிங் வீராங்கனை ஆவார். அவர் ஆரம்பம் முதலே பவானி தேவியை  அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.மேலும்,அவர்  11 புள்ளிகள் பெற்ற நிலையில் பவானி தேவி எந்த புள்ளிகளும் பெறவில்லை.

இதனையடுத்து,புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி வேகமாக 7 புள்ளிகள் வரை பெற்றார்.இருப்பினும்,மற்றொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளைவரை பெற்றிருந்தார்.எனவே,15 புள்ளிகளை முதலில் எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால்,மனோன் ப்ருநட் 15 -7 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளார்.இதனால்,பவானி தேவி தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

மன்னிப்பு:

இதனையடுத்து,இதற்காக மனிப்பு கேட்கும் வகையில் வீராங்கனை பவானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மிகப்பெரிய நாள்,இன்று உற்சாகம் & உணர்ச்சிபூர்வமாக இருந்தது.நான் முதல் போட்டியை 15/3 இல் நதியா அஜீசிக்கு எதிராக வென்றேன், ஒலிம்பிக்கில் ஒரு போட்டியை வென்ற முதல் இந்திய ஃபென்சிங் வீராங்கனையாக ஆனேன்.ஆனால் 2 வது போட்டியில் நான் உலகின் 3 வது ஃபென்சிங் வீராங்கனையான மனோன் ப்ரூனெட்டுக்கு எதிராக 7/15 என்ற கணக்கில் தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தேன், ஆனாலும் வெல்ல முடியவில்லை.என்னை மன்னிக்கவும்”,என்று பதிவிட்டிருந்தார்.

ஆறுதல்:

இந்நிலையில்,இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,எம்.பி.யுமான ராகுல்காந்தி,பவானி தேவிக்கு அறுதல் கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”உங்களது முயற்சியில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இது வெற்றியை நோக்கிய மற்றொரு படியாகும்”,என்று தெரிவித்துள்ளார்.