இந்திய அளவிலான சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு,தமிழக அரசுக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படடு வருகிறது.அந்த வகையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
அதன்படி,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி,நேற்று இரவு 7 மணிக்கு இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் முடிவுக்கு வந்தன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு,தமிழக அரசுக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்கு பாராட்டுகள்.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாராவாரம் நடத்தப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது தான் இந்திய அளவில் சாதனையாக உள்ளது. அந்த சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்; கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.