கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி  பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.

இதனிடையே  வருகின்ற 23-ஆம் தேதி மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே ராகுல் காந்தி தமிழக வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகரி அவர்கள் முன்னிலையில் திருப்பூர் கட்சி  அலுவலகத்தில் நடைபெற்றது.ஆலோசனைக்கு பின் கே.எஸ்.அழகிரி பேசுகையில், கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை. அவரை கூட்டணிக்கு வரவேற்கிறோம்.எங்களுடன் கமல் சேர வேண்டும்.அவர்  பிரிந்து நின்றால் கண்டிப்பாக அது வாக்குகளை சிதறடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.