ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் தாஜ்மகால்….

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது.

தாஜ்மஹால், கடந்த  மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், சுற்றுலா பயணியருக்காக, தாஜ்மஹால் இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹாலுக்குள் செல்ல, ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்படுகிறது. இங்கு, ஒரு நாளுக்கு, 2,500 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள், சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும்  உரிமம் பெற்ற வழிகாட்டிகளுக்கு மட்டுமே, உள்ளே நுழைய அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை, ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj