சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்.! சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மேலாளர் ரேஷ்மாவிடம் விசாரணை.!

மறைந்த சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பிரபல மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஜூன் 14 அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திறமை மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம், கடந்த வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் வைத்து சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை விசாரணை நடைப்பெற்றது. அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ரேஷ்மா ஷெட்டி பாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களான அக்ஷய் குமார், கத்ரீனா கைப், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு மேலாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மும்பை காவல்துறையினர், சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், உறவினர்கள் உட்பட  35-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மறைவு குறித்து விசாரிக்க சிபிஐ-யிடம் வழக்கை கொடுக்குமாறு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.