தல மற்றும் குட்டி தல ஓய்வு குறித்து சூர்யா ட்வீட்.!

தேசத்தை ஊக்கப்படுத்திய தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு சலூட் என்று சூர்யா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தோனியின் வழியை தேர்ந்தெடுப்பதாக கூறி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். ஒரே நாளில் இருவரும் ஓய்வு பெறுவது குறித்து அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தோனியை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், ஒரு உண்மையான சாதனையாளர் என்பது தனது தொழிலில் வெற்றியையும், மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் தனது சமூகத்திற்கு தன்னால் இயன்றதை திருப்பி கொடுப்பவரும் தான் உண்மையான சாதனையாளன். அந்த வகையில் என் ஹீரோ தோனி மற்றும் எனது அன்பு நண்பர் ரெய்னாவும் சாதனையாளர்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் உங்கள் இருவருக்கும் சிறந்தது மட்டுமே காத்திருப்பதாகவும், தேசத்தை ஊக்கப்படுத்தியதற்காக ஒரு சலூட் என்றும் கூறியுள்ளார்.