திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 20 குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

நியாமி புறநகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் திடீரெனெ ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டின் தலைநகரான நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் சில வகுப்பறைகள் நடைபெற்று வந்தது. அப்பள்ளியில் சுமார் 2,000 பேர் வரை கல்வி பயின்று வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்றுநேரத்திலே தீ மளமளவென பள்ளி முழுவதும் பரவியதால், மாணவர்கள் பலரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

ஆயினும், தீயில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். பள்ளியில் திடீரென தீ பிடித்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.