மாணவர்களே…இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – இதை பின்பற்றுங்கள்!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.

ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.அதன்படி,பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.93 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.இதற்காக,4,092 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளன.மேலும், இத்தேர்வானது வருகின்ற மே 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.மேலும்,பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டியவை இதோ:

  • பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
  • 10.15-க்கு ஐந்து முறை மணி அடிக்கப்படும்,அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.
  • 1.10-க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
  • வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்து,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ளன.மேலும்,10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.