உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்..!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நோய் பாதித்த ஒருவருக்கு செலுத்தும் மருந்து ரூ.16 கோடியாக இருக்கிறது.

இதுபோன்ற மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்க வரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் விதிக்கப்படுகிறது. அதனால் இந்த வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் இந்த மருந்தை இறக்குமதி செய்யும்பொழுது வரிகளை மத்திய அரசு விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு வரி விலக்கு அளிக்கவும், இது போன்ற மருந்துகளுக்கு வரிகளை நீக்குவதற்கு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தியும் நிதியமைச்சருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.