இலங்கை நிழல் உலக தாதாவின் கூட்டாளி தலைமறைவு… காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை….

தலைமறைவான இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவை மாவட்டத்தில்  போலி ஆதார் அட்டை பெற்று பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் தமிழகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 3ல், உயிரிழந்த நிலையில், மதுரையில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின், அங்கொட லொக்கா பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கியை, அவரது இறப்புக்கு பின், கூட்டாளி சனுக்கா தனநாயக்காவிடம் கொடுத்துள்ளனர். அவர் ஜூலை, 20 வரை மதுரையில் தங்கியுள்ள்ளார். இந்நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி., – டி.எஸ்.பி., ராஜு அவர்கள் தலைமையில், சனுக்கா தனநாயக்காவை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘சனுக்கா தனநாயக்கா, இந்தியாவை விட்டு செல்லவில்லை. அவர் மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பதுங்கியிக்கலாம் என்பதால், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர் பிடிபட்ட பின்னரே அங்கொட லொக்கா குறித்த மர்மங்கள் விலகும்’ என்றனர்.

author avatar
kavitha