புதிய பிரதமர் நியமனம் எப்போது? – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால்,பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கூறி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து,பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி சார்பில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும்,இந்த வாரத்திற்குள் புதிய பிரதமரையும்,அமைச்சரவையையும் நியமிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மேலும்,”புதிய பிரதமரும் அமைச்சரவையும் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறவேண்டும்.மேலும், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க 19 வது அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவேன்.குறிப்பாக,அதிபரின் அதிகாரங்களை குறைத்துக் கொள்ள தயார்”,என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,”தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும்,நாடு அராஜகத்திற்கு ஆளாவதைத் தடுக்க வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுளேன். நிறுத்தப்பட்ட அரசாங்கத்தின் விவகாரங்களைத் தக்கவைக்கவும் புதிய அரசாங்கத்தை அமைக்க நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும்”,என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மேலும்,இலங்கையில் பாதுகாப்பு,நிதி அமைச்சகங்களின் செயலாளர்களை மீண்டும் அதே பதவியில் நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் கமல் குணரத்னேவும்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் டி அர்மீசும்,நிதி அமைச்சகத்தின் செயலாளராக மகிந்த சிறிவர்த்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே,இலங்கையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று அல்லது நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி சார்பில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இலங்கை அதிபர் கூறியுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு அளிக்க சில கட்சிகள் ஆதரவு தரவுள்ளதாக கூறப்படுகிறது.