மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை..! 4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  ஆகிய 4 நகரங்களில் இன்று மிக கடுமையாக மழை பெய்யக்கூடும் என்பதால் இந்நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், மும்பை பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. காலை 8.30 மணியளவுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் மும்பை பகுதியில், கொலாபாவில் 8 சென்டிமீட்டர், சாந்தாகுரூஸில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

முதல் நாள் பெய்த மழையிலே சாலைகள் வெள்ளபெருக்காக காட்சி தருகிறது. மேலும், பீரிச்கேண்டி மருத்துவமனை அருகில் மழைநீர் பெருமளவு சூழ்ந்து சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் தாராவி, தாதர், சயான் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சயான், குருதேஜ்பகதூர் நகர் ஆகிய இடங்களில் கொட்டி தீர்த்த மழையால் தண்டவாளங்கள் மூடியுள்ளன. இதன் காரணத்தால் முன்னெச்சரிக்கையாக குர்லா, மும்பை சிஎஸ்டி ஆகிய இடங்களில் மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், மாதுங்கா கிங்ஸ் சர்க்கிள், செம்பூரில் உள்ள மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை, அந்தேரி போன்ற இடங்களில் வாகனங்கள் செல்ல இயலாத அளவுக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.