ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அய்யோ பாவம்! – தயாநிதி மாறன்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் கருத்து.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம் என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்! என்று கூறியுள்ளார்.

மேலும், இன்றைய குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்று, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குழப்பங்களை நீக்குவோம் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்