ஊரடங்கில் மாடித்தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வீட்டில் ஊரடங்கில் அமைத்த மாடித்தோட்டைத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னர் வீடுகளில் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பார்கள். தற்போது மாடி வீடுகளாகவும், நெருக்கமான கட்டிடங்களாலும் தோட்டம் அமைப்பது கடினமாகிவிட்டதால் பலரும் அவர்களது மொட்டை மாடிகளில் தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைப்பதில் பல நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குஷ்பூ, மாதவன், சுஹாசினி ஆகிய திரைபிரபலங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனும் களத்தில் இறங்கியுள்ளார். அவர் தனது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் புதிய வீட்டு மொட்டைமாடியில் இந்த மாடித்தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார். மேலும், இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், நம்ம வீட்டு தோட்டம். இதை ஊரடங்கிற்கு சில நாட்கள் முன்னால் தான் தொடங்கினேன். தற்போது இதில் விளையும் காய்கறி, கீரைகளை பறித்து சமைக்கிறோம். இதை இன்னும் முழுமையாக தயார் செய்ய நினைக்கிறன். அதற்கு சிறிது காலம் ஆகும். அதன் பின்னரும் உங்களுக்கு தோட்டத்தை காட்டுகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த தோட்டத்தை போன்று நமது வாழ்க்கையும் விரைவில் செழிப்பாகிவிடும் என்று கூறியுள்ளார்.