இரண்டாம் நாள் ஆட்டம்:ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 52 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 26,  ரஹானே 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப பின்னர், கூட்டணி அமைத்த  ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.

இதனையடுத்து,முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்த நிலையில் இருந்தனர். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3, டிம் சவுத்தி 1 விக்கெட்டை பறித்தனர்.

இந்நிலையில்,இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில்,ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்கினர். ஆனால்,ஆட்ட தொடக்கத்திலேயே ஜடேஜா,சவுதியின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின்னர்,விருத்திமான் சாஹாவும் வந்த வேகத்திலேயே திரும்ப, அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்து,கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தற்போது,106 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 329 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.