அதிர்ச்சி சம்பவம்.! மகள் கண் எதிரே தாயை கூலிப்படை வைத்து கொன்ற கொடூர தந்தை.!

  • மதுரையில் குமரகுரு என்பவரின் வீட்டுக்குள் புகுந்து மனைவி மற்றும் தாயை கத்தியால் குத்தி, சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.
  • போலீஸ் விசாணையின் போது, சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து தானே கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் கணவன்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா தெருவை சேர்ந்தவர் குமரகுரு, இவரது மனைவி லாவண்யா இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தார்.  கீழே குமரகுருவும், ஹாலில் அவரது தாயாரும் படுத்திருந்துள்ளனர். திடீரென வீட்டுக்குள் புகுந்த இருவர் நேராக மாடியில் தூங்கிக்கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது கண்விழித்த மூத்த மகள், தனது கண் எதிரே தாயை இருவர் கத்தியால் குத்துவதைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்களை தடுக்க வந்த பாட்டியையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

வீட்டுக்குள் சத்தம் கேட்டு வந்த குமரகுரு, தாய் மற்றும் மனைவி கத்தியால் குத்துப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தாயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குமரகுருவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குமரகுரு தெரிவித்துள்ளார்.

அதில், தனது தந்தை இறந்த பிறகு அவர் நடத்தி வந்த பாத்திரக்கடையை இருவரும் கவனித்து வந்தோம். நான் கொஞ்சம் ஆடம்பரமாக செலவு செய்வதால் பாதி சொத்தை எனது மனைவியின் பேரில் எனது தந்தை எழுதி வைத்தார். பின்னர் வியாபாரம் குறைந்ததால் சொத்தை விற்று செலவு செய்தேன். மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்தார், அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுகுறித்து தனது கடையில் வேலை பார்க்கும் அலெக்ஸ் என்பவரிடம் கூறி கூலிப்படையை தயார் செய்தேன். அதற்காக 1 லட்சம் முன்பணமாக கொடுத்தேன்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றோம், அப்போது எனது மனைவியை கொலை செய்ய முயன்றபோது தலையில் மட்டும் வெட்டுபட்டு தப்பித்துக்கொண்டார். அதனால் வீட்டில் வைத்துக் கொலை செய்ய முடிவெடுத்தோம் என தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் குமரகுரு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த அலெக்ஸ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்