மீரட்: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறப்பு…!

மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான்  காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில்,கொரோனா தொற்று பரவலானது அதிக அளவில் இருந்து வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.ஆனால்,தங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லவே இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பலமுறை மறுத்து வருகிறார்.

இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் ஏழு கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக இறந்துள்ளனர்.

அதாவது,மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான்  காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,ஆனந்த் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுபாஷ் யாதவ் தெரிவிக்கையில்,”எங்களுக்கு ஒவ்வொரு நாளும் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை,ஆனால் எங்களுக்கு 90 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கின்றது.மேலும்,நேற்று எங்களிடம் இருந்த மொத்த ஆக்ஸிஜன் சிலிண்டரும் முடிந்துவிட்டது.இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக மூன்று கொரோனா நோயாளிகள் இறந்தனர்”,என்று கூறினார்.

மேலும்,கே.எம்.சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுனில் குப்தா இதைப்பற்றி கூறுகையில்,”நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை எங்களிடம் ஆக்ஸிஜன் இல்லை. எங்களிடம் ஆக்ஸிஜன் இருந்திருந்தால் நான்கு கொரோனா நோயாளிகளை காப்பாற்றியிருப்போம்” என்று அவர் கூறினார்.