#Breaking:முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்த சீமான்,பாரதிராஜா..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பேசியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென,முதல்வர் ஸ்டாலின்,குடியரசுத்தலைவருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,”ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று விடுவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலினை,தலைமைச்செயலகத்தில் திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 7 பேர் விடுதலை குறித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்,கூறுகையில் ,”தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. என்று வாழ்த்து தெரிவித்தோம்.பின்னர்,7 பேர் விடுதலை குறித்து பேசியபோது,அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்கு,உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.எனவே,நீதிமன்ற தீர்ப்பில் என்ன வருகின்றது என்று பார்த்துவிட்டு,நாம் மேற்கொண்டு 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும்,அவர்களின் விடுதலை தொடர்பான அனுமதிக்கான கையெழுத்து ஆளுநரிடமிருந்து,குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது.எனினும்,அவர்களின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்வோம்”,என்று முதல்வர் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார்.