செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்- ராமதாஸ்

காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள  காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39).இவருக்கு  பிரேமா  என்ற மனைவியும் ,  2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே  கடந்த 30-ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் நெய்வேலி போலீசார்  செல்வமுருனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பின்பு ,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் கடந்த 4-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து வருகின்றனா்.இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

நெய்வேலி காவல்நிலையச் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.