கர்நாடகாவில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

கர்நாடகாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், பல மாநிலங்களில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும், பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக இணைய வழியிலும் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் முன், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.