#Breaking: பள்ளிகள் திறப்பு.. நவ.9-ல் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் உட்பட பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை அச்சம் காரணமாக, 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்துக்கேட்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, 9 – 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், அந்தந்த பள்ளிகளில் தங்களின் கருத்துக்களை கூறலாம் இந்த கூட்டம், காலை 10 மணி முதல் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெறும். நேரில் வரமுடியாத பெற்றோர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பு கூட்ட முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.