கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் இல்லையாம்.! பிரபலம் ஓபன் டாக்.!

பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி , சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது.

இந்த படத்தில் வரும் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜூக்கு பாராட்டுகள் குவிந்தது என்றே கூறலாம். முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொல்வதை தொடர்ந்து ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு பதிலாகவே இரண்டாம் பாகம் இருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டது சத்யராஜ் இல்லை என்றும் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் என்றும் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் திரைக்கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் மும்பை சிறையில் இருந்ததாகவும், அவரை அழைத்து வர முயற்சித்து, அது சாத்தியமில்லை என்பது தெரிந்த பின்னரே சத்யராஜ் நடித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் சத்யராஜ் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்ததாகவும், சஞ்சய் தத் நடித்தால் கூட இந்த பெயரை வாங்கியிருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.