சாத்தான்குளம் வழக்கு.., 3 போலீசாரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் 3 போலீசாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும் அவற்றை நீதிமன்றம் நிராகரித்து வருகிறது.

ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan