#Breaking:உயர்நீதிமன்றத்தில் சந்திப்பேன் – சசிகலா அதிரடி!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால்,சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 2017-ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது, பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.இதை எதிர்த்து சசிகலா வழக்கு தொடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி,இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக சசிகலா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக நாமக்கலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிகலா:”அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்”,என்று தெரிவித்துள்ளார்.