சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதன குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது. தற்போது இந்திய அரசியல் வட்டாரம் முழுக்க பேசுபொருளாக மாறி இருப்பது சனாதன குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தான்.
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் பாஜகவினருக்கு அறிவுறுத்த உள்ளார்.
இதனிடையே, சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு அயோத்தி சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு விலை வைத்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் சில இடங்களில் அந்த சாமியாரின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் புகாரில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறியிருந்தார் அமைச்சர் உதயநிதி. இதனால், பல்வேறு வழக்குகள் , எதிர்ப்புகள் அமைச்சர் உதயநிதி மீது வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உதயநிதி அதில், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.
சனாதன விவகாரத்தில் காற்றில் கம்பு சுற்றுக்கொண்டிருக்கின்றனர் பாஜகவினர். சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன். திமுக தலைமையின் ஆலோசனை பெற்று சட்டத்துறை உதவியுடன் வழக்கை எதிர்கொள்வேன் என்றுள்ளார். எனவே, உத்தரபிரதேச சாமியார் மீது வழக்கு போடுவது, உருவபொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபட வேண்டாம்.
திமுகவினர் நேரத்தை வீணடிக்க வேண்டாம். சாமியார்களுக்குத்தான் இந்த காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என்ற தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்துள்ளார். என் தலையைவிட முற்றும் துறந்தவரிடம் எப்படி ரூ.10 கோடி உள்ளது என்பது தான் வியப்பாக உள்ளது என்றார்.
மேலும், வடிவேலின் திரை கதாபாத்திரம் போல் பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். வடிவேலுவின் 23ஆம் புலிகேசி கதாபாத்திரத்தோடு போட்டி போட்டு கொண்டு நகைசுவை செய்கிறார் பிரதமர். உண்மையை சொல்வது என்றால் மக்களின் அறியாமை தான் பாஜகவினரின் நாடக அரசியலுக்கான மூலதனம். மணிப்பூர் கலவரம், சிஏஜி அறிக்கையை திசை திருப்பவே சனாதனம் கம்பை சுற்றுகிறது பாஜக.
ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே பாஜகவினர் பொய் செய்திகளை கையில் எடுத்துள்ளனர் . எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் சித்தாந்தங்களின் வெற்றிக்காக பாடுபட உறுதி ஏற்போம். பாஜகவின் பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி – மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் – சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடருவோம். அவதூறுகளை நம்பி களமிறங்கியிருக்கும் ஆதிக்கவாதிகளை, வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை. சமூக நீதி என்றென்றும் மலரட்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Let us resolve to work for the victory of the ideologies of Periyar, Anna, Kalaignar and Perasiriyar. Let Social Justice flourish forever. pic.twitter.com/Eyc9pBcdaL
— Udhay (@Udhaystalin) September 7, 2023