சாம்சங் தலைவர் விடுவிப்பு! சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு …

சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்  விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தென் கொரியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

சாம்சங் குழும தலைவர் ஜே வொய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.

சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் வழக்குகள், தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குய்ன் ஹைக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து  பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தென் கொரிய நாட்டையே அரசியல் ரீதியாக உலுக்கிய வழக்காகும்.

இதில் லீ பிப்ரவரி 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் தென் கொரிய அதிபரும் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.

உலக அளவில் மிகவும் பிரபலமாகத் திகழும் சாம்சங் குழும சொத்துக்கு வாரிசுகளில் ஒருவர் ஜே ஒய் லீ.

சாம்சங் குழுமத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவராவார். தந்தை லீ குன் ஹீ-க்கு வயதானதைத் தொடர்ந்து குழும நிறுவனங்களுக்கு இவர் தலைமை ஏற்றார். கொரியாவின் மிகுந்த வசதி படைத்த குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment