தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் சக்கா ஜாம் போராட்டம் – விவசாயிகள் கைது.!

தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலை மறியல் போராட்டமாகும்.இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்து வருகிறது.

ராஜஸ்தான் – ஹரியானா எல்லையான ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொகாலி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று தமிழகத்தில் ராஜபாளையம் அருகே சேத்தூர், கடலூர், தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளின் சக்கா ஜாம் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் இதுவரை நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்