விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் ரூ. 45 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளதாக மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கிறார். மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் எம். எஸ். ஆனந்த் இயக்கத்தில் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தையும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.
இந்த நிலையில் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ரூ. 45லட்சம் வரை சுருட்டி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடி செய்த பணத்தை வைத்து ஒரு வீடே வாங்கி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் அந்த பெண்ணின் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. . இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.