மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு -மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து,பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.அக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வேளாண் துறைகளுக்கான மேம்பாடுகள் போன்றவை  குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி,நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யவும், இத்திட்டங்களை  ஒன்பது மாதங்களுக்குள் செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக,கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மேம்படுத்தவும், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கவும் பல்வேறு துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.