ரூ.1.70 லட்சம் கோடி கடன் அதிகமாகியிருப்பது பெரும் கவலை அளிக்கிறது-டிடிவி தினகரன் ..!

ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கடன் தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் எதிர்பார்த்ததைவிட வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டு விட்டு இன்னொரு பக்கம் அரசின் கடன் தொகையும் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது நகைமுரண் ஆக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட நாடு செயல்படாத நிலையில் வளர்ச்சிப்பணிகள் வழக்கமான திட்டங்கள் பெருமளவில் அமல்படுத்தப்படாத நிலையில் தமிழக அரசு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது அரசின் செலவினங்கள் வெளிப்படைத் தன்மையோடு இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி அளவிற்கு அதிகமாக கடன் வாங்கி உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை 84,000 கோடி ரூபாயாக இருக்கும் என்ற அறிவிப்பு அரசின் நிர்வாகத் திறமையின்மையை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. முதலமைச்சரின் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் ரூ.18750 கோடி நிதி வரி வாங்கியிருப்பது பல்வேறு கேள்விகளையும் மக்களிடம் எழுப்பி இருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு  செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். பேரிடர் காலத்தில் அழிவுக்குள்ளாகும் நெற்பயிருக்கான இழப்பீடு ஹெக்டேருக்கு ரூ. 13,000லிருந்து  20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுத்துவது  முக்கியமானதாகும்.

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் குறைத்திருப்பதைப் போல தமிழகத்தில் குறித்து அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் செஸ் வரியை மட்டும் குறைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப் போவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம் தருகிறது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகள் இல்லாமல் பெயரளவிற்கான அறிக்கையாக அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan