வன்முறை நடக்கும் அபாயம்.! 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு- ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட்

கருப்பு தினமான நாளை வன்முறை நடக்கும் அச்சம் உள்ளதால் இன்று மற்றும் நாளை ஸ்ரீநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட தினமான ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளதால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அச்சம் உள்ள காரணத்தால் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்ரீநகரில் இன்று (ஆகஸ்ட் 4) மற்றும் நாளை (ஆகஸ்ட் 5) ஆகிய இரு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறுகையில், பிரிவினைவாதிகளும், பாகிஸ்தான் நிதியுதவி குழுக்களும் ஆகஸ்ட் 5 ம் தேதியை கருப்பு தினமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே பொது வாழ்க்கை மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் ஆர்பாட்டங்கள் நிகழும் அச்சம் உள்ளதாகவும், இதுபோன்ற ஆர்பாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கும் காரணமாக உள்ளது. எனவே போராட்டங்களை தடுத்து நிறுத்தவும், கொரோனா பரவலை தடுக்கவும் புதன்கிழமை இரவுவரை கடுமையான பாதுகாப்பு கட்டுபாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வெளியே செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.