68.50 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்..!மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும்.

தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் வைகை அணையின் கரைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், முல்லை பெரியாறு அணையிலிருந்தும் வைகை அணைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.

இதன் காரணத்தால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அணைக்கு வரக்கூடிய நீர் திறக்கப்படும் நீரை விட அதிகமான அளவு என்பதால் தற்போது அணையின் முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை தொட்டவுடன் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.