அதிகரிக்கும் ஒமிக்ரான்:பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தளவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவ தொடங்கியுள்ள நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக,ஒமிக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் மக்கள் அதிகம் கூட இருப்பதால்,கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது.எனவே,இது தொடர்பாகவும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும்,மாநிலங்களில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.