இன்று முதல் பிப்.15-ஆம் தேதி வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் இன்று முதல் பிப்.15 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் கடந்த 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், கடந்த ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.மேலும்,பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள்,நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதே சமயம்,தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கட்டுப்பாடுகள் மட்டும் இன்று(1-2-2022) முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.அதன்படி,

இன்று (1-2-2022) முதல் 15-2-2022 வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு:

  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
  • நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
  • மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
  • பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
  • அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.
  • உணவகங்கள், விடுதிகள். அடுமணைகள். தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிசபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.
  • அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, salons and Spas) போன்றவை ஒரு நேரத்தி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

author avatar
Castro Murugan