Republic day 2023 : சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உணர்ச்சிமிகு வீர முழக்கங்கள்..!

ஜனவரி 26, 1950 அன்று இந்திய நாடு குடியரசாக மாறியதைத் தொடர்ந்து 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், போராட்டத்தில் பங்கேற்க மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முழக்கங்களை கூறினார். இந்த முழக்கங்கள் இன்றும் மக்களிடம் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் இருந்து வருகிறது. அத்தகைய உணர்ச்சிமிகு முழக்கங்களில் சிலவற்றை பார்க்கலாம்.

1. ஜெய் ஹிந்த் :

“ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் ஜெர்மனியைச் சேர்ந்த நேதாஜியின் செயலாளரால் உருவாக்கப்பட்டது என்று சில தகவல்கள் வெளியாகியது. ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்த வார்த்தை சுதந்திர இந்தியாவின் தேசிய முழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜெய் ஹிந்த் முத்திரை சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் முத்திரையாக இருந்தது. ஆனால் இன்று, “ஜெய் ஹிந்த்” என்பது அரசியல் கூட்டங்கள் மற்றும் பள்ளி விழாக்களில் நாம் கேட்கும் ஒரு வணக்கமாக மாறியுள்ளது.

Jai Hind

2. வந்தே மாதரம் :

“ஜெய் ஹிந்த்” போலவே “வந்தே மாதரம்” என்பதும் நமது இந்தியாவின் மற்றொரு வீர முழக்கமாகும். இதற்கு “அம்மா நான் உன்னை வணங்குகிறேன்” என்று அர்த்தம். 1882 இல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயினால் பெங்காலி மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புகழ்பெற்ற நாவலான ‘ஆனந்தமத்’ நாவலில் உள்ள ஒரு கவிதையில், இந்தியாவை நமது தாயுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இதனையடுத்து மக்கள் முதலில் தேசபக்தி முழக்கமாகவும் பின்னர் போர் முழக்கமாகவும் “வந்தே மாதரம்” என்று முழங்கினர்.

vandhe matharam

3. செய் அல்லது செத்து மடி : 

“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தை முதன் முதலாக முழங்கியவர் நமது தேச தந்தை மகாத்மா காந்தி ஆவார். விடுதலைப் போராட்டங்களில் மிகவும் முக்கியமான வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய ஆலோசனை 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் கூறிய “செய் அல்லது செத்து மடி’ என்ற வீர வாசகம் நாடெங்கும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

mahatma gandhi

4. இன்குலாப் ஜிந்தாபாத் :

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் உருது கவிஞருமான, ஹஸ்ரத் மொஹானி 1921 ஆம் ஆண்டு இந்த முழக்கத்தை உருவாக்கினார். இந்த முழக்கத்தை உருவாக்கியவர் மொஹானியாக இருந்தாலும் இதனை பிரபலபடுத்திய பெருமை இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கையே சேரும். இந்த முழக்கத்திற்கு “புரட்சியே வாழ்க” என்று அர்த்தம். இந்த முழக்கம் இந்திய இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை எழுப்பி அவர்களை சுதந்திர இந்தியாவுக்கான போரில் சேரத் தூண்டியது.

bhagat singh 1

5. உங்கள் இரத்ததை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1944 இல் பர்மாவில் இந்திய தேசிய இராணுவ வீரர்களிடம் “உங்கள் இரத்ததை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்” என்று கூறியதோடு இந்திய இளைஞர்கள் தன்னுடன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரது வார்த்தைகள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதற்கும் நாட்டிற்காக போராடும் லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருந்தது.

subhash chandra bose

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment