வெளிநாடுகளிலிருந்து வந்த நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பு!

கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நிவாரண பொருட்கள் அனைத்தும் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தனித்தனியாகப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தனது தீவிரத்தை அதிகரித்து வருகிறது. தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவால் இறப்பவர்களை விட அத்தியாவசிய தேவைகள் இன்றியும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முடியாத நிலை காரணமாகவும் தான் தற்போது பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தற்பொழுது நிவாரண உதவிகள் பல வந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு வரக்கூடிய நிவாரண பொருட்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் முதலில் கையாண்டு மாநிலங்களுக்கு கொடுத்து வந்தது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இதற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு நிவாரண பொருட்களை பெற்று அதை மாநிலங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து 24 வகையான பொருட்கள் வந்து உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், முககவசம், தனிநபர் கவச உடை, ரெம்டெசிவர் உள்ளிட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எந்தெந்த மாநிலங்களுக்கு என்னென்ன தேவை அதிகம் இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொண்டு தமிழகம் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளிநாட்டு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal