கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இதற்கு முதலில் கையெழுத்திட்டார்.  அதில் இம்மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி, தினமும் 200 பேர் என்ற அடிப்படையில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என்ற அடிப்படையில் ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கும் ரேஷன் கடை ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இதனால் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கொரோனாவால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களின் முழு விவரங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.