மூச்சு விடுவதை வைத்து கொரோனாவை கண்டறியும்கருவி- இஸ்ரேல் வல்லுநர்களுக்கு அனுமதி தர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோரிக்கை!

மூச்சு வெளியிடுவதை வைத்தே கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை கண்டறியும் புதிய கருவியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனம் கண்டறிந்து உள்ள நிலையில், இந்த சாதனத்தை இந்தியாவிலும் நிறுவுவதற்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்களுக்கு அனுமதி தரவேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை மூச்சு வெளியிடுவதை வைத்து விரைவில் கண்டறியக் கூடிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சில வினாடிகளிலேயே கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய முடியுமாம். மேலும் இந்த கருவியை வைத்து கண்டறியப்பட்ட சோதனை 95% வெற்றியடைந்து உள்ளதாம். எனவே, இந்த நிறுவனத்துடன் கடந்த ஜனவரி மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி நூற்றுக்கணக்கான கருவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனத்திடமிருந்து வாங்கி அதன் மூலம் மாதம் 73 கோடி ரூபாய் மதிப்பிலான சோதனைகளையும் செய்ய உள்ளதாம். ஏற்கனவே இந்த கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த கருவிகளை இந்தியாவில் நிறுவுவதற்கு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிப்பதற்கும் இஸ்ரேலை சேர்ந்த வல்லுனர்களுக்கு இந்தியா அனுமதி அளிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியா வருவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் இவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal