மழை வெள்ளம் : அமெரிக்காவில் 20 பேர் உயிரிழப்பு ; 50 பேர் மாயம்!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகியுள்ளனர். 

அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெரும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வீடுகளின் கூரை வரை சூழ்ந்து காணப்படும் நிலையில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் வெள்ள நிவாரண பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal