ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் படி தவறாக எதுவும் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 5 நாள்களாக ஒத்திவைக்கப்பட்டு திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்திய ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் ஆளும்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் பொறுப்பு. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது, இதில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது, பிரச்சினை இல்லாத காரணத்திற்கு நீங்கள் நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும்படி தவறாக எதுவும் கூறவில்லை, நமது ஜனநாயகத்தை காப்பாற்ற அந்நிய நாட்டின் உதவியை அவர் ஒருபோதும் கோரவில்லை. இது முட்டாள்தனம். நமது நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார், இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.