உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – முதல்வர்!

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் தினேஷ் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது சிறுவன் நடவு செய்த கொடிக்கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி சிறுவன் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் – வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற எனது வேண்டுகோளை கழகத்தினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்”.

கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத – கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal