புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டட விவகாரம் : முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

குடிசை மாற்று வாரியம் திட்டத்தை நாசப்படுத்தும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.

குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக்குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரிலும் இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், குடிசைமாற்று வரிய கட்டடத்தை பிரதமரின் வீட்டுத்திட்டத்தில் சேர்த்தது ஏன் என்று கேள்வி  எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குடிசை மாற்று வாரியம் திட்டத்தை நாசப்படுத்தும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது. எனவே, தரமில்லாத வீட்டை கட்டியுள்ள ஒப்பந்ததாரர், இதற்கான அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.