வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக போராட்டம்

டெல்லி புராரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அண்மையில்  மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஒரு சில மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளன.குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தான் விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை கடந்த இரண்டு நாட்களாக நடத்தினார்கள்.ஆனால் டெல்லிக்குள் நுழையவிடாமல்  போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் வந்ததால் ,போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பேரணியில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை,போலீசார் இறுதியாக  சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள்  நுழைய அனுமதித்தனர்.டெல்லியில் உள்ள புராரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதனால் மூன்றாவது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.