Pro Kabaddi League: ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை தோற்கடித்தது யு மும்பா

ஹைதராபாத்: 5-வது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 5-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியைப் பரபரப்பாக வென்றுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இரு அணிகளும் தங்கள் ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரிக்க வைத்தது.
யு மும்பா வீரர் காஷிலிங் அடாகே, ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இரு புள்ளிகளைப் பெற, அந்த அணி 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் மாறிமாறி புள்ளிகளை குவித்தனர்.
இறுதியில் யு மும்பா அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் பரபரப்பாக வென்றது. இந்த ஆட்டத்தில் யு-மும்பா ரைடர் காஷிலிங் அடாகே 7 புள்ளிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
யு – மும்பாவிடம் தோற்றது குறித்து ஹரியானா கேப்டன் சுரேந்தர் கூறுகையில், ‘ அனுப் குமாருடன் நான் ஏற்கெனவே விளையாடியிருக்கிறேன். அவருடைய ஆட்டம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும்.
அதனால் அவரை மடக்க சில திட்டங்களை யோசித்து வைத்தோம். ஆனால் அதைப் புரிந்து கொண்ட அனுப் குமார், தனது ஆட்ட உத்திகளை மாற்றி விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்றார். அவரை எங்களால் பிடிக்க முடியவில்லை. இதனால் தோல்வி கண்டோம்’ என்று கூறினார்.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகளும், 2-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – யு.பி.யோதா அணிகளும் மோதுகின்றன.
இந்த ஆட்டங்கள் முறையே இரவு 8 மற்றும் 9 மணிக்கு நடக்கின்றன.
author avatar
Castro Murugan

Leave a Comment