பாஜக எம்.பியை தேநீர் விருந்துக்கு அழைத்த பிரியங்கா காந்தி.?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

இசட் பிளஸ் பாதுகாப்பாக வழங்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதனால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள  இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.  இல்லையென்றால், அபராதம், வாடகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.   பிரியங்கா காந்தி தங்கியிருந்த வீடு, அவருக்குப்பின் பாஜக எம்.பி அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பாஜக எம்.பி அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், இதுவரை அனில் பலூனியிடம் இருந்து எந்தத் தகவலும் பிரியங்கா காந்திக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் பிரியங்கா காந்தி கடந்த 23 ஆண்டுகளாக தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan